ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று (28.12.2025) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
டிசம்பர் 27 அன்று மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்களை, எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது.
தற்போது வரை தமிழகத்தைச் சேர்ந்த 61 மீனவர்களும், 248 மீன்பிடிப் படகுகளும் இலங்கை அதிகாரிகளின் வசம் உள்ளனர்.
இத்தகைய கைது நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாகக் குறிப்பிட்ட முதல்வர், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.