மக்களால் அன்புடன் 'கேப்டன்' என்று அழைக்கப்பட்ட தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் உணர்ச்சிகரமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளை வெறும் நினைவு நாளாக மட்டும் பார்க்காமல், 'குருபூஜை' விழாவாக தேமுதிகவினர் கொண்டாடி வருகின்றனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த முக்கிய நிகழ்வு குறித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அரசியல் கடந்து விஜயகாந்த் மீது கொண்டிருந்த நட்பின் அடிப்படையில் அவர்கள் அஞ்சலி செலுத்த வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜயகாந்தின் கொடையுள்ளத்தை போற்றும் வகையில், இன்று நாள் முழுவதும் நினைவிடத்திற்கு வரும் அனைவருக்கும் உணவு வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சினிமா மற்றும் அரசியல் என இரு துறைகளிலும் முத்திரை பதித்த விஜயகாந்த், ஏழைகளின் பசி தீர்ப்பதையே தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டிருந்தார். அவரது மறைவிற்கு பிறகும், அவர் காட்டிய வழியில் லட்சக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவது அவரது புகழுக்கு மகுடம் சேர்ப்பதாக உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைமையகங்களிலும் தேமுதிகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி தங்களது தலைவருக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.
Edited by Siva