அடுத்த 7 நாட்கள்.. தமிழகத்தில் தொடரும் மழை.. சென்னையில் எப்படி இருக்கும்?
TV9 Tamil News December 30, 2025 04:48 AM

வானிலை நிலவரம், டிசம்பர் 29, 2025: கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக டிசம்பர் 29ஆம் தேதி இன்று டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், இரவு அல்லது அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பு தெரிவித்தார்.

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

இதனைத் தொடர்ந்து நாளை, அதாவது டிசம்பர் 30ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் டிசம்பர் 31ஆம் தேதி தொடங்கி 2026 ஜனவரி 2ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், இரவு முதல் அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் படிக்க: அன்புமணி நெஞ்சில் குத்துகிறார்…கண்ணீர் சிந்தி அழுத ராமதாஸ்!

ஊட்டியில் தொடரும் உறைபனி:

குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில், கடந்த சில தினங்களாக ஊட்டி முதலிடத்தில் உள்ளது. இதேவேளை, வரக்கூடிய நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாகப் பதிவாகக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீலகிரி மற்றும் கொடைக்கானல் ஆகிய மலைப்பகுதிகளில் இரவு அல்லது அதிகாலை வேளையில் உறைபனி ஏற்படும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் படிக்க: பாமகவுக்கும்-அன்புமணிக்கும் சம்பந்தமில்லை…ஜி.கே.மணி ஆக்ரோஷம்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், இரவு முதல் அதிகாலை வேளையில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பனிமூட்டம் அதிகரித்து வரும் சூழலில் அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பு தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.