ஒடிசா மாநிலம் தியோகர் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகப் பெற்றோர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர்களது ஐந்து வயது சிறுவன் இரவு முழுவதும் அடர்ந்த வனப்பகுதியில் கடும் குளிரில் தனியாகக் கழித்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜியானந்தபலி கிராமத்தைச் சேர்ந்த துஷ்மந்த் மஜ்ஹி மற்றும் ரிங்கி மஜ்ஹி தம்பதியினர், தங்கள் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டுள்ளனர்.
சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு வனப்பகுதிக்குள் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்ற அவர்கள் அங்கு விஷம் அருந்தியுள்ளனர். இதில் தந்தை துஷ்மந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, தாய் ரிங்கி மயக்கமடைந்து கிடந்துள்ளார். பெற்றோர்கள் இருவரும் தரையில் கிடப்பதைக் கண்ட அந்தச் சிறுவன், பயத்தில் அங்கிருந்து நகராமல் இரவு முழுவதும் அவர்களுக்கு அருகிலேயே இருந்துள்ளார்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை சூரிய உதயத்திற்குப் பிறகு வனப்பகுதியை விட்டு வெளியே வந்த சிறுவன், சாலையில் சென்றவர்களிடம் உதவி கோரியபோதுதான் இந்த விபரீதம் வெளிச்சத்திற்கு வந்தது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் மயக்க நிலையில் இருந்த தாயை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெற்றோர்கள் சிறுவனுக்கும் விஷம் கொடுத்திருந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக அவன் உயிர் பிழைத்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் அந்தச் சிறுவன் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவனது தாத்தா மற்றும் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டான். இந்தத் துயரச் சம்பவம் குறித்து தியோகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.