பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படும் சீன நாட்டைச் சேர்ந்த ஒருவரின் தொடர் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த வீடியோக்களில் இடம்பெற்றுள்ள அவரது பொது நடத்தை அவமரியாதை மற்றும் பொருத்தமற்றதாக உள்ளதாக பலர் விமர்சித்து வருகின்றனர்.
இஸ்லாமாபாத்தில் படமாக்கப்பட்டதாக கூறப்படும் அந்த காணொளிகளில், பர்தா அணிந்த பெண்களை அணுகி சிகரெட் வழங்குவது, வழிப்போக்கர்களை கேலி செய்வது போன்ற செயல்களில் அந்த நபர் ஈடுபடுவதாக தெரிகிறது. இந்நிலையில், அந்தப் பெண்கள் சங்கடமடைந்து எந்த பதிலும் அளிக்காமல் அங்கிருந்து விலகிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இதே நேரத்தில், அந்த நபரின் தோழர்கள் கேமராவுக்குப் பின்னால் சிரித்துக் கொண்டே காட்சிகளை பதிவு செய்வதும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
மேலும் பரவலாக பகிரப்பட்டுள்ள பிற வீடியோக்களில், அந்த நபர் பொது இடங்களில் ஆணவமாக நடந்து கொள்வது, உள்ளூர்வாசிகளை கேலி செய்வது, சாலையோர உணவுக் கடைகளில் பணம் செலுத்தாமல் உணவு எடுத்துச் சாப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.
இந்த காணொளிகள் பாகிஸ்தான் சமூக ஊடக பயனர்களிடையே கடும் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய நடத்தை வெளிப்படையாகப் பதிவாகியிருந்தும், இதுவரை எந்தவித காவல்துறை அல்லது நிர்வாக நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையே பலர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இதனிடையே, இந்த விவகாரம் பாகிஸ்தான் – சீனா உறவுகள் தொடர்பான அரசியல் விவாதத்தையும் தூண்டியுள்ளது. சில சமூக ஊடக பயனர்கள், பாகிஸ்தானின் சீனாவுடன் உள்ள நெருங்கிய பொருளாதார உறவுகளை முன்வைத்து, வெளிநாட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.
“வெளிநாட்டினராக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும்” என பலர் வலியுறுத்தியுள்ளனர். இதுவரை, இந்த வைரல் வீடியோக்கள் தொடர்பாகவோ அல்லது அதில் இடம்பெற்ற நபரின் அடையாளம் குறித்தோ, இஸ்லாமாபாத் காவல்துறை அல்லது பிற அதிகாரிகள் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. இதனால் சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் மேலும் தீவிரமடைந்து வருகின்றன.