கோவை மலுமிச்சம்பட்டியில் தெற்கு மாவட்ட பா.ஜ. சார்பில், மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி காசி சங்கமத்தில் பேசும் போது, உத்தரபிரதேச மாநிலத்தில், பள்ளிகளில் தமிழை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறினார். அதன்படி, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக முதல்வர், 'தமிழ், தமிழ்' என கூறி தமிழை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கிறார் என்று விமர்சித்துள்ளார். அதாவது, முதல்வர் ஸ்டாலினின் ஒரே நோக்கம், தன்னுடைய மகனை முதல்வராக்க வேண்டும் என்பதே. இதற்காக, காங்கிரஸ் கூட்டணியை இறுக்கி பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய நயினார், விரைவில் நானும், அண்ணாமலையும் அரசியல் ஆட்டம் ஆட போகிறோம் என்றும் அது மோடியும், அமித் ஷாவும் எதற்காக இந்த கூட்டணியை அமைத்தார்களோ, அதை நிறைவேற்றவே குறித்த ஆட்டம் ஆடப் போகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்திற்கு மத்திய அரசு என்ன செய்தது என கேட்கிறார்கள். ஆனால், தமிழகத்திற்கு 14 லட்சம் கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில், நடுநிலையோடு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதை நிறைவேற்றி இருந்தால், எந்த பிரச்சினையும் இருந்திருக்காது. நிறைவேற்றாதாலேயே ஒரு உயிர் போனது என்று கூறியதோடு, இனி வரும் பௌர்ணமி நாட்களிலும், திருப்பரங்குன்றத்தில் மிகச் சிறப்பாக கிரிவலம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் யாருக்கும் விடிவில்லை என்றும், முதல்வர் குடும்பத்துக்கு மட்டும் தான் விடிவு என்றும் திமுக அரசை விமர்சித்துள்ளதோடு, தமிழகத்தில், 17 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது; யாரும் இனி தப்பிக்க முடியாது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.