கர்நாடக மாநிலம் கார்வாரில் இருந்து அங்கோலா நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் தனது சகோதரனுடன் பயணம் செய்த இளம்பெண் ஒருவர், களைப்பு காரணமாகச் சீட்டில் அமர்ந்தபடியே கண் அயர்ந்துள்ளார்.
இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அருகில் அமர்ந்திருந்த ஒருவர், அந்தப் பெண்ணின் உடல் உறுப்புகளைத் தொட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். திடுக்கிட்டு விழித்த அந்தப் பெண், நடந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.
அதிர்ச்சியில் இருந்து மீண்ட அந்தப் பெண், சற்றும் தாமதிக்காமல் தனது செல்போனை எடுத்து அந்த நபரின் முகத்தை வீடியோவாகப் பதிவு செய்தார். அதோடு நில்லாமல், பேருந்திலேயே அந்த நபரைச் சரமாரியாகக் கேள்விகள் கேட்டு வெளுத்து வாங்கினார்.
பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு டேக் (Tag) செய்தார். இந்த வீடியோ காட்டுத்தீ போல வைரலானதைத் தொடர்ந்து, உத்தர கன்னடா எஸ்பி தீபன் எம்.என் அவர்கள் அந்த நபரை உடனடியாகக் கைது செய்ய உத்தரவிட்டார்.