காரைக்காலில் இருந்து கடலுக்கு சென்ற 11 தமிழக மீனவர்கள், நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த வாரம் ஏற்கனவே 6 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த தொடர் கைது நடவடிக்கைகள் தமிழக மீனவ கிராமங்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். வாழ்வாதாரமான படகுகள் பறிமுதல் செய்யப்படுவதால் மீனவ குடும்பங்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகின்றன. எல்லையை தாண்டியதாக கூறப்படும் புகார்களுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
இந்த விவகாரத்தில் தலையிட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசின் தூதரக ரீதியிலான முயற்சிகள் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva