தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் ரொக்கப் பரிசுத் தொகை தற்போது அரசியல் விவாதமாக மாறியுள்ளது.
2022 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பணம் வழங்கப்படாத நிலையில், தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ரூ. 3,000 வழங்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடியுள்ளார்.
இன்று நீதிமன்றத்தில் ஒரு வழக்கிற்காக ஆஜராக வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த ஆண்டு மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்காதது ஏன்? இந்த ஆண்டு மட்டும் ரூ. 3,000 வழங்குவது தேர்தலுக்காக கொடுக்கப்படும் பகிரங்க லஞ்சம்" என்று பரபரப்பாக பேட்டியளித்தார்.
தேர்தலை மனதில்கொண்டு மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவே இத்தகைய அறிவிப்புகளை திமுக அரசு வெளியிடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகளும் இந்த தொகையை 'தேர்தல் கால லஞ்சம்' என விமர்சித்து வரும் நிலையில், சீமானின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Edited by Siva