பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வகுத்துள்ள வளர்ச்சிப் பாதையில் இந்தியா இனி ‘ஆட்டோ பைலட்’ முறையில் தானாகவே இலக்கை நோக்கி முன்னேறும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற ‘வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான இளம் தலைவர்கள்’ கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசுகையில், “நான் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பிறந்தவன் என்பதால் இளைஞர்களான உங்களுக்கும் எனக்கும் பெரிய வயது வித்தியாசம் உள்ளது.
காலங்கள் மாறினாலும் எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரு விஷயம் ‘முடிவெடுக்கும் திறன்’ மட்டுமே. பிரதமர் மோடியின் சீரிய தலைமையால் இந்தியாவின் வளர்ச்சி வேகம் இன்று எவராலும் தடுக்க முடியாத நிலைக்குச் சென்றுள்ளது. இனி யாரும் இயக்கத் தேவையில்லை, நாடு தானாகவே வளர்ச்சியை நோக்கிச் செல்லும் அளவிற்குத் தகுதியான இடத்தை இந்தியா எட்டியுள்ளது. நிச்சயம் நாம் வளர்ந்த பாரதத்தை உருவாக்குவோம்” என இளைஞர்களிடையே உத்வேகத்துடன் உரையாற்றினார்.