ஸ்பெயினின் தெற்குப் பகுதியான அண்டலூசியாவில் உள்ள அடமுஸ் நகருக்கு அருகே நேற்று (ஜன. 18) மாலை இரு அதிவேக ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
“>
மலாகாவில் இருந்து மட்ரிட் நோக்கி சுமார் 300 பயணிகளுடன் சென்ற ‘இரியோ’ (Iryo) நிறுவனத்தின் அதிவேக ரயில், திடீரெனத் தடம் புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் பாய்ந்தது. அந்தச் சமயத்தில் எதிரே வந்து கொண்டிருந்த ‘ரென்ஃபே’ (Renfe) நிறுவனத்தின் ரயில் மீது அது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இரு ரயில்களும் கடுமையாகச் சிதைந்த நிலையில், உயிரிழந்தவர்களில் ஒரு ரயிலின் ஓட்டுநரும் அடங்குவார்.

“இந்த இரவு நாட்டுக்கு ஆழ்ந்த வேதனையைத் தந்துள்ளது” என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சஸ் உருக்கமாகத் தெரிவித்துள்ள நிலையில், மீட்புப் பணிகளுக்காக ராணுவத்தின் அவசரகாலப் பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். தண்டவாளத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், மட்ரிட் மற்றும் அண்டலூசியா நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் இன்று முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.