குஜராத் மாநிலம் சூரத்தில் பேருந்தை அனுமதிக்கப்படாத இடத்தில் நிறுத்த மறுத்த காரணத்திற்காக பெண் பயணி ஒருவர் ஓட்டுநரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரத் மாநகராட்சி சார்பில் இயக்கப்படும் விரைவுப் பேருந்து ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை பயணித்த பெண் ஒருவர் பேருந்து நிறுத்தமில்லாத இடத்தில் வண்டியை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
விதிமுறைகளின்படி பேருந்தை நிறுத்த முடியாது என ஓட்டுநர் மறுத்த நிலையில் அடுத்த நாள் அதே பேருந்தில் ஏறிய அந்தப் பெண் ஓட்டுநரின் சட்டையைப் பிடித்து இழுத்துத் தாக்கியதுடன் தனது கைபேசியால் ஓட்டுநரின் தலையில் பலமுறை அடித்துள்ளார்.
இதில் ஓட்டுநருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்த நிலையில் பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்தத் தாக்குதல் காட்சிகள் பேருந்துக்குள் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது மற்றும் காயம் ஏற்படுத்தியது ஆகிய பிரிவுகளின் கீழ் அந்தப் பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.