வீர விளையாட்டு விறுவிறுப்பு:625 காளைகள் களம் – 256 வீரர்கள் மோதல்...!-ஜல்லிக்கட்டில் 21 பேர் காயம்
Seithipunal Tamil January 19, 2026 07:48 PM

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில், புனித அந்தோணியார் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று உற்சாகமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.சிவகங்கை, கரூர் , புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட கம்பீரமான காளைகள், ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டு களத்தை சூடுபிடிக்கச் செய்தன.

இந்த பாரம்பரிய வீர விளையாட்டில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை திறம்பட அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் தங்க நாணயங்கள், பீரோ, கட்டில், சைக்கிள், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

காலை 9.20 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி, மாலை 4.50 மணிவரை பரபரப்பாக நடைபெற்று நிறைவடைந்தது.இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 625 காளைகள் களம் கண்டன. அவற்றை அடக்க 256 வீரர்கள் துணிச்சலுடன் பங்கேற்றனர்.

போட்டியின் போது காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் என மொத்தம் 21 பேர் காயமடைந்தனர்.மேலும், காயமடைந்த அனைவருக்கும் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் 2 பேர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பாரம்பரிய ஜல்லிக்கட்டை நேரில் கண்டு களிக்க, ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் விழா சூழல் திருவிழா கோலமாக மாறியது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.