மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பூட்டிய வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்துடன் மாயமான பெண், மாந்திரீகம் செய்த ஒருவருடன் போபால் நகரில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தூர் பாணகங்கா பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், திடீரென காணாமல் போனதால் அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். தொழில்நுட்ப உதவியுடன் பெண்ணின் நடமாட்டத்தைக் கண்காணித்தபோது, அவர் போபாலில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அங்கு விரைந்த தனிப்படை போலீசார், அந்தப் பெண்ணை மீட்டு அவரிடமிருந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை மீட்டனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு மற்றும் மன அழுத்தம் காரணமாக அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது.
குடும்பப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காகப் பூஜை செய்ய வந்த ராகேஷ் ஜாதவ் என்ற மாந்திரீக நபருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறியுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், அப்பெண்ணை மூளைச்சலவை செய்து அழைத்துச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீட்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ள அதிகாரிகள், அவர் கடத்தப்பட்டாரா அல்லது சுயமாகச் சென்றாரா என்பது குறித்து விரிவான விசாரணைக்கு பின் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.