நடுவானில் வெடித்த விமான எஞ்சின்.. அலறிய பயணிகள்.. அதிரவைக்கும் வீடியோ!
பேச்சி ஆவுடையப்பன் February 14, 2026 03:44 PM

நைஜீரியாவின் லாகோஸிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்றின் எஞ்சின் தரையிறங்கும் போது பலத்த சத்தத்துடன் வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

நடுவானில் வெடித்த எஞ்சின்

நைஜீரியா நாட்டின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றான லாகோஸிலிருந்து போர்ட் ஹார்கோர்ட்டுக்கு போயிங் 737 விமானம் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. சுமார் 80 பயணிகள் விமானத்தில் பயணம் செய்த நிலையில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் இடது பக்க எஞ்சின் உறை வெடித்தது. 

அரிக் ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த வணிக விமானத்தில் ஏற்பட்ட சம்பவத்தில் வலது பக்க எஞ்சின் பலத்த சேதமடைந்தது. உள்ளூர் நேரப்படி காலை 7:24 மணிக்கு முர்தலா முகமது விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சுமார் 27,000 அடி உயரத்தில் பயணித்தபோது இந்த சம்பவமானது நிகழ்ந்ததாக விமானத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். நடுவானில் பலத்த இடி சத்தம் கேட்டதாகவும், எஞ்சின் சேதமடைந்ததைக் கண்டு தாங்கள் அஞ்சி நடுங்கியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து விமானம் தெற்கு நைஜீரியாவில் அவசரமாக தரையிறங்கியது. ஒரே ஒரு எஞ்சின் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்த நிலையில் தொடர்ந்து வானத்தில் பறந்ததைக் கண்டு அலறும் பயணிகளின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதும் தான் அதில் பயணித்த பயணிகள் மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.

இந்த சம்பவத்தில் நல்ல வேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.  அரிக் ஏர் மற்றும் நைஜீரிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளது. பயணம் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் விமான நிறுவனம் மனதார மன்னிப்பு கேட்பதாக அரிக் ஏர் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

காலை 8:05 மணியளவில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கிய நிலையில் உடனடியாக அவசர சேவைகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. எஞ்சின் மூடப்பட்டிருந்த உலோக உறை நன்றாக கிழிந்து விமானத்தின் எஞ்சின் வெளியே தரும் காட்சிகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விமானம் இறங்குமிடமான ஹார்கோர்ட் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகளை கொண்டு செல்லும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு எப்போதும் எங்கள் முன்னுரிமை என அரிக் ஏர் விமானம் முன்னுரிமை அளித்துள்ளது. சமீபகாலமாக விமானங்கள் தொடர் விபத்தில் சிக்கி வருவது பயணிகள் பாதுகாப்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.