10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாக்களில் பிழையா? உடனே தெரிவியுங்கள்! அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
க.சே.ரமணி பிரபா தேவி March 01, 2026 02:14 PM

பொதுத் தேர்வுகளில் உள்ள பிழைகள் குறித்து மின்னஞ்சல் மூலம் கருத்துகள் தெரிவித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

’’மேல்நிலை இரண்டாம் ஆண்டு, முதலாம் ஆண்டு அரியர் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுகளுக்கான வினாத்தாள் சார்ந்து ஏதேனும் கருத்துகள் இருந்தால், dgequestionpaperqueries@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கருத்துத் தெரிவிக்கலாம்.

யாரெல்லாம் கருத்துத் தெரிவிக்கலாம்?

குறிப்பாக பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரின் கருத்துக்களை பெற்று தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  • கருத்துகளை இ மெயில் மூலமாக மட்டுமே தெரிவிக்க வேண்டும்
  • கேள்வி சரியில்லை என்று பொதுப்படையாகக் கூறாமல், எந்தக் கேள்வியில் எது சரியில்லை என்று தெளிவாக குறிப்பிட்டுதெரிவிக்கவும்.
  • தேர்வு நடந்த நாள் அன்றே பாடம் சார்ந்து கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இவ்வாறு இல்லாமல் கேள்வித் தாளில் முரண்பாடு, தவறு உள்ளது என்று பொதுப்படையாக கூறுவது தவிர்க்கப்பட வேண்டும் மின்னஞ்சல் மூலம் பெறப்படாத எந்த ஒரு கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று இதன் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எனவே இந்த விவரங்களை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.