வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுகவில் வேட்பாளர் தேர்வு பணிகள் வேகமெடுத்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா போட்டியிடலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் ஆதரவு கோரி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
திமுக தற்போது விருப்பமனுக்கள் பெற்று வரும் சூழலில், சிட்டிங் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் வாய்ப்பு பெற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் சில தொகுதிகளில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்ற சைகைகளும் வெளியாகி வருகின்றன. இந்த சூழலில்தான் மேயர் பிரியா சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்கத் தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயராக பதவியேற்ற பிரியாவின் பதவிக்காலம் இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில், அவர் சட்டமன்றத்திற்கு வர விருப்பம் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது. குறிப்பாக வட சென்னை பகுதிக்குட்பட்ட திருவிக நகர் தொகுதியில் போட்டியிட அவர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது திருவிக நகர் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக தாயகம் கவி உள்ளார். ஆனால் இந்த முறை அந்த தொகுதி மேயர் பிரியாவுக்கு ஒதுக்கப்படலாம் என்ற பேச்சு நிலவுகிறது. சமீப காலமாக அந்த தொகுதியில் மேயர் பிரியா தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேயர் பிரியா மட்டுமல்லாமல், துணை மேயர் மகேஷ் குமாரும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 10-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், 2026 தேர்தலில் சென்னையின் சில தொகுதிகளில் புதுமுகங்களை பார்க்கலாம் என்ற அரசியல் மதிப்பீடுகள் எழுந்துள்ளன. திமுக தலைமையிலான வேட்பாளர் தேர்வு செயல்முறை எவ்வாறு அமையும், சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் இடம் தக்கவைத்துக்கொள்வார்களா அல்லது நகராட்சி நிர்வாகத்திலிருந்து சட்டமன்றத்துக்கு புதிய முகங்கள் வருமா என்பது விரைவில் தெளிவாகும்.