இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் இன்று (மார்ச் 3) மாலை வானில் அபூர்வ காட்சியாக மலர உள்ளது. சூரியன், பூமி, சந்திரன் இந்த மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, பூமி சூரிய ஒளியை மறைத்து தனது நிழலை சந்திரன் மீது வீசுகிறது.
அந்த நிழல் மெதுவாக சந்திரனை மூடிக்கொள்ளும் போது, வளிமண்டலத்தைத் தாண்டி வரும் சூரிய ஒளியின் சிவப்பு அலைநீளங்கள் மட்டும் சந்திரனைத் தொட்டு, அதனை செம்மஞ்சள் நிறத்தில் ஒளிரச் செய்கின்றன. இதனால் தான் இந்த நிகழ்வு “ரத்த நிலவு” என அழைக்கப்படுகிறது.
முழு கிரகண கட்டம் சுமார் 58 நிமிடங்கள் நீடிக்கும். India நேரப்படி மாலை நேரத்திலேயே இது தொடங்குகிறது. சந்திரன் உதயமாகும் சமயத்திலேயே கிரகணம் நடைபெறுவதால், நாட்டின் பல பகுதிகளில் இறுதி கட்ட காட்சியை மட்டுமே தெளிவாகக் காண முடியும்.மாலை 4:58 மணிக்கு நிழல் கிரகணம் ஆரம்பமாகி, பின்னர் அது முழு கிரகணமாக மாறும்.
மாலை 5:32 மணிக்கு முழு கிரகண கட்டம் முடிவடையும். இரவு 7:53 மணிக்கு இந்த விண்வெளி நிகழ்வு முற்றிலும் நிறைவடைகிறது.கிழக்கு அடிவானத்தில் தாழ்வாக எழும் சந்திரன், சிவப்பு ஒளியில் மிதந்து எழுவது கண்கவர் தருணமாக இருக்கும்.
குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள், அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற இடங்களில் சந்திரன் சீக்கிரம் உதயமாகுவதால் முழு கிரகணத்தையும் ரசிக்கலாம். அங்கு மாலை 5:10 முதல் 5:25 வரை உச்சக்கட்ட நிலை தெளிவாக தெரியும்.
சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் மாலை 6:20 முதல் 6:30 மணிக்குள் பகுதி கிரகண காட்சி மட்டும் காணக்கிடைக்கும்.முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது,சூரிய கிரகணத்தைப் போல அல்லாமல், சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது.
எந்த வித பாதுகாப்புக் கண்ணாடிகளும் தேவையில்லை. குடும்பத்துடன் வானத்தை நோக்கி இந்த இயற்கையின் அற்புத சிவப்பு திரையரங்கைக் கண்டு ரசிக்கலாம்.