2026 சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் எங்களுக்கும் பங்கு கொடுக்கவேண்டும் என காங்கிரஸ் கேட்டிருப்பது திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தவெகவுக்கு ஆதரவாக பிரவீன் சக்ரவர்த்தி மற்றும் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் பேசியது திமுக தரப்புக்கு கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. ஒருபக்கம், மாணிக்கம் தாகூர் எம்.பி. திமுகவுக்கு எதிராக பேசி வந்தார். அதன்பின் கூட்டணி பற்றி யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது என காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டது.
ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க முடியாது என திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லிட சட்டசபை தேர்தல் 39 தொகுதிகள் மற்றும் இரண்டு ராஜ்யசபா தொகுதிகளையாவது கொடுக்கவேண்டும் என காங்கிரஸ் கேட்கிறது. ஆனால், இதை திமுக ஏற்கவில்லை. 25 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக திமுக சொல்கிறது. எனவே இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை..
எனவே, திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கவுள்ளார். அதற்கு முன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையுடன் ஆலோசனை செய்ய முடிவெடுத்தார்.
இதையடுத்து செல்வபெருந்தகை சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்றார். அங்கே இருவரும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதன்பின் முக ஸ்டாலினை சிதம்பரம் சந்தித்து பேசவிருக்கிறார். அப்போது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றிய முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத்தெரிகிறது.