தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளது. எனவே கூட்டணி, தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மநீக, மமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. தற்போது புதிதாக தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ கட்சிகள் இணைந்துள்ளது. எனவே கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விட இந்த முறை குறைவான தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் தான் திமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் தர வேண்டும் முழக்கத்தை காங்கிரஸ் கட்சி எழுப்பியது. ஆனால் திமுக தரப்பு இதனை ஏற்றுக்கொள்ளாததால் தவெகவுடன் கூட்டணி அமைப்போம் என திமுகவை மிரட்டியது. ஒரு கட்டத்தில் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராக பார்க்கப்படும் பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசினார். மேலும் திமுக அரசை விமர்சித்தும், தவெகவிற்கு ஆதரவாகவும் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.
இதனால் திமுக தலைமை அதிருப்தி அடைந்து காங்கிரஸ் கட்சி இல்லாத கூட்டணியை உருவாக்க திட்டமிட்டது. இதற்கு ஏற்ப தேமுதிகவை இழுத்து காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுத்தது. இருந்த போதும் திரைமறைவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் எனவும் கூடுதலாக ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்தது. ஆனால் இதனை ஏற்றக்கொள்ளாத காங்கிரஸ் 39 தொகுதிகளை தந்தால் தான் கூட்டணி தொடரும் என தெரிவித்தது. இதனையடுத்து ராஜ்யசபா சீட்டிற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 5ஆம் தேதி தான் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் கூட்டணி தொடர்பான முடிவை இன்று மாலைக்குள் அறிவிக்க திமுக வலியுறுத்தி வருகிறது. நாளைய தினம் ராஜ்யசபா வேட்பாளர்களின் பெயரை திமுக அறிவிக்கவுள்ளது. இந்தநிலையில் தான் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவுறுத்தலின் பேரில் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை ப.சிதம்பரம் சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. 39 தொகுதிகளை கேட்டுவந்த காங்கிரஸ் கட்சிக்கு 36 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.
ஆனால் திமுக தலைவர் ஸ்டாலினோ அதிகபட்சமாக 28 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதுவும் இன்று மாலைக்குள் முடிவை அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டதன் பேரில் நளை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே நாளை மாலைக்குள் கூட்டணி தொடர்பாக முடிவை அறிவிக்கவில்லையென்றால் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட இருந்த ராஜ்யசபா சீட்டை திமுகவினருக்கே வழங்கப்படும் எனவும் கூறப்புடுகிறது. அந்த வகையில், திமுக சார்பாக 3 ராஜ்யசபா வேட்பாளர்கள் பெயரையும் கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் தொடர்பாக அறிவிப்பை வெளியிட திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.