அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு… NDA கூட்டணியில் இணையும் சசிகலா?…. EPS கொடுத்த விளக்கம்…!!!
SeithiSolai Tamil March 03, 2026 07:48 PM

தலைநகர் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசியல் நிலவரம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்தார்.

வரவிருக்கும் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதித்ததாகவும் அண்ணா தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மிக விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

தங்கள் கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் தற்போதைய நிலையில் அண்ணா தி.மு.க. கூட்டணி மிகவும் சுமூகமாக இருப்பதாகவும் தெரிவித்த அவர் மாறாக தி.மு.க. கூட்டணியில் தான் பெரும் குழப்பம் நிலவி வருவதாகக் குற்றம் சாட்டினார்.

மத்திய அமைச்சருடனான இந்தச் சந்திப்பின் போது சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்தோ அல்லது அவரை கூட்டணியில் இணைப்பது குறித்தோ எந்தவித விவாதமும் நடைபெறவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தினார். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர் வலுவான கூட்டணியுடன் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

அண்ணா தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையிலான உறவு மற்றும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.