டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் நாளை மறுநாள் மோதவுள்ளது.
முன்னதாக சூப்பர் 08 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் அதிரடியாக ரன்கள் குவித்து சஞ்சு சாம்சன் இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
ஆட்ட முடிவில், அணியின் வெற்றிக்கு பிறகு, சஞ்சு சாம்சன் ஹெல்மெட்டை வீசிவிட்டு, முழங்காலிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்தினார். இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால், இந்த கொண்டாட்டத்தில் ஹெல்மெட்டைத் தரையில் வீசியது தற்போது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

அதாவது, ஐசிசி விதிகளின் படி, ஒரு வீரர் தனது கிரிக்கெட் உபகரணங்களை (பேட், ஹெல்மெட் போன்றவை) கோபத்திலோ அல்லது அதீத உற்சாகத்திலோ தரையில் வீசினால், அது "விளையாட்டு உபகரணங்களைத் தவறாகப் பயன்படுத்துதல்" என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக, சஞ்சு சாம்சன்னுக்கு தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது. பொதுவாக, கிரிக்கெட் உபகரணங்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்காக வீரர்களுக்குத் தடை விதிக்கப்படுவதில்லை. இருப்பினும், ஐசிசி நடத்தை விதிகளின்படி, இத்தகைய செயல்கள் பொதுவாக லெவல் 1 குற்றமாகவே கருதப்படுகின்றன.

அதாவது, கோபம் அல்லது எதிர்ப்பை வெளிப்படுத்துவதை விட, உற்சாகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வீரர்களிடம் நடுவர்கள் இவ்வாறு பெரிய அளவிலான போட்டித் தடை போன்ற கண்டிப்புகளை வழங்குவதில்லை.
இதுவரை சஞ்சு சாம்சன் மெது அதிகாரப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. வழக்கமாக இது போன்ற கொண்டாட்டங்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என்பதால், அவர் அரையிறுதியில் விளையாடுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது.
இதேவேளை, கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி ஸ்காட்லாந்து வீரர் ஜார்ஜ் முன்சி, ஆட்டமிழந்த பிறகு ஹெல்மெட்டை வீசியதற்காக அவருக்கு ஒரு 'டிமெரிட்' ((Demerit) புள்ளி வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.