நாமக்கல் முட்டை சந்தையில் சரிவு: 12 நாட்களில் 110 காசு வீழ்ச்சி! - 15 கோடி முட்டைகள் தேக்கம்
Seithipunal Tamil March 04, 2026 09:48 PM

நாமக்கல் மண்டலம் கோழிப்பண்ணை தொழிலின் மையமாக விளங்கி வருகிறது. 1000-க்கும் மேற்பட்ட பண்ணைகளில் தினமும் 7 கோடிக்கு மேற்பட்ட முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இவை தமிழக மாவட்டங்கள், அரசின் சத்துணவு திட்டம், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. தினசரி விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நிர்ணயிக்கிறது.

கடந்த ஆண்டு 600 காசுகளை எட்டிய முட்டை விலை, பின்னர் 640 காசுகள் வரை உயர்ந்தது. ஆனால் சமீபத்தில் சரிவு தொடங்கி, 540 காசிலிருந்து 460 காசுகளாக குறைந்தது. நேற்று நடந்த கூட்டத்தில் மேலும் 30 காசுகள் குறைக்கப்பட்டதால், தற்போது கொள்முதல் விலை 430 காசுகளாக தாழ்ந்துள்ளது.

வெறும் 12 நாட்களில் 110 காசுகள் சரிவு ஏற்பட்டுள்ளது.கோடை காலம், ரம்ஜான் நோன்பு காரணமாக உள்ளூர் நுகர்வு 20% குறைந்துள்ளதுடன், அமெரிக்கா – ஈரான் மோதல் காரணமாக துபாய், கத்தார், ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு நடந்த தினசரி 80 லட்சம் முட்டை ஏற்றுமதியும் கடந்த 3 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் 15 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தேக்கம் அடைந்து, பண்ணையாளர்கள் குளிர்பதன கிடங்குகளில் சேமித்து வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விலை சரிவு காரணமாக பண்ணையாளர்கள் கவலையில் உள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.