தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த ஜெல்திம்மனூர் கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கணவன் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்கும் நிவேதிதா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை தம்பதியினருக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த பாக்கியராஜ் தனது மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து நிவேதிதாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த நிவேதிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்துத் தகவல் அறிந்து வந்த பஞ்சப்பள்ளி போலீசார் உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தப்பியோடிய கணவனைத் தேடி வருவதுடன் இக்கொலைச் சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.