மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் நடந்த விபரீதம், பார்ப்பவர்களையே உறைய வைத்துள்ளது. ஒரு இளைஞர் தனது பைக்கிற்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தபோது, கையில் செல்போனைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. அடுத்த சில நொடிகளிலேயே பைக்கின் டேங்க் அருகே ‘திபுதிபு’ எனத் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. பெட்ரோல் பங்க் என்பதால் எந்நேரமும் பெரும் வெடிப்பு நிகழலாம் என்ற அச்சத்தில் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர்.
ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் கொஞ்சமும் பதறாமல், தீப்பிடித்த பைக்கை உடனடியாகப் பின்னோக்கித் தள்ளி பெட்ரோல் மெஷினை விட்டுத் தள்ளிவிட்டனர். அதே வேகத்தில் தீயணைப்புக் கருவிகளை எடுத்து சில நிமிடங்களிலேயே தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்த ஊழியர்களின் மின்னல் வேகச் செயலால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி, பெட்ரோல் பங்க்கில் மொபைல் போன் பயன்படுத்துவது பாதுகாப்பானதா என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ளது.