AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வந்த பிறகு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை கையாளும் விதமே பெரும் அளவில் மாறிவிட்டது. பெரும்பாலான நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு ஊழியர்கள் வேலையில் கை வைக்கின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏராளமான தொழிலாளர்கள் IT நிறுவனங்களில் இருந்து வேலையில் இருந்து நீக்கப்பட்டதை நாம் காண முடிந்தது. இந்தியாவிலேயே கூட TCS நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 2 சதவீதம் பேரை வேலையில் இருந்து நீக்கியது. இந்த நிலையில் அமெரிக்காவின் பெரிய TECH நிறுவனமான Oracle தங்கள் ஊழியர்களில் 30000 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி ஒட்டுமொத்த TECH துறைக்குமே பெரிய அதிர்ச்சியை தந்திருக்கிறது.
இந்த மாதத்திலேயே Oracle ஊழியர்கள் பணி நீக்க அறிவிப்பை வெளியிடும் என்றும் விரைவில் தங்களுடைய நிறுவனத்தையே பெருமளவில் மறு கட்டமைப்பு செய்ய முடிவு செய்திருப்பதாகவும் ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் செய்தி குறிப்பிடுகிறது. Oracle நிறுவனத்தின் பல்வேறு துறைகளிலும் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் இந்த பணி நீக்கத்தால் பாதிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு மாற்றாக ஏஐ தொழில்நுட்பத்தை பணியில் அமர்த்த Oracle நிறுவனம் முடிவு செய்து இருக்கிறதாம்.
அண்மையில் தான் இந்த நிறுவனம் தங்களுடைய கிளவுட் பிரிவில் புதிதாக ஊழியர்களை வேலைக்கு பணி அமர்த்துவதை நிறுத்தி வைத்தது. இந்த நிறுவனம் AI பிரிவில் மிக தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக ஓபன் AI நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தமும் செய்து இருக்கிறது. ஆனால் இது இந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்தி தந்திருக்கிறது. ஏனெனில் பாரம்பரியமான ஒரு டேட்டா பேஸ் சாப்ட்வேர் நிறுவனத்திலிருந்து அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய அளவிலான கிளவுட் நிறுவனமாக மாற வேண்டும் என Oracle நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லாரி எலிசன் முடிவு செய்திருக்கிறார். இதற்காக இந்த நிறுவனம் AI பிரிவிலும் அது சம்பந்தப்பட்ட டேட்டா சென்டர்கள் மற்றும் அதற்கான தொழில் நுட்பங்களிலும் அதிக முதலீடு செய்து வருகிறது.
Oracle நிறுவனத்தின் AI இலக்குகளை எட்ட 30 லட்சம் ஜிபியூ-கள் தேவைப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மட்டும் இல்லாமல் 156 பில்லியன் டாலர்கள் மூலதனம் தேவையாம். அண்மையில் தான் Oracle நிறுவனம் 58 பில்லியன் டாலர்களை கடனாக வாங்கியது. Oracle நிறுவனம் திடீரென AI-இல் மட்டும் கவனம் செலுத்துவதால் அச்சமடைந்து ஏராளமான நிதி நிறுவனங்கள் இதற்கு கடன் வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே இதன் கடன் அதிகரித்து விட்டது, இப்போது செய்யும் முதலீடுகள் 2030-ம் ஆண்டு வரை லாபம் தராது என்பதால் பல நிறுவனங்களும் கடன் தர மறுத்து வருகின்றன.

இதன் காரணமாக Oracle நிறுவனம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டு அவர்களுக்கு வழங்கக்கூடிய சம்பளத்தை மிச்சம் செய்து அதில் AI இலக்குகளை முடித்து கொள்ளலாம் என திட்டமிட்டு இருக்கிறதாம். இதன் காரணமாகவே சுமார் 30,000 பேரை வேலையில் இழந்து நீக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அமேசான் நிறுவனம் ஜனவரி மாதத்தில் தான் 16,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தது , அதற்கு முன்பு அக்டோபரில் தான் 14,000 பேரை வேலையில் இருந்து நீக்கியது.
கடந்த ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களில் 15,000 பேரை வேலையில் இருந்து நீக்கியது. சேல்ஸ் ஃபோர்ஸ், பிளாக் இங்க் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களும் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.