சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, நடிகர் கமல்ஹாசன் தயாரிக்க உள்ள புதிய படமான ‘தலைவர் 173’ குறித்து ஆரம்பத்தில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்தப் படத்தை முதலில் இயக்குநர் சுந்தர்.சி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அவர் இந்தப் படத்திலிருந்து விலகியதாக அறிவித்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
முதலில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் அந்தத் திட்டம் மாற்றப்பட்டு, கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்குவார் என்று கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
ஏற்கனவே சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘அருணாச்சலம்’ திரைப்படம் ரஜினிகாந்துக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. மேலும் சமீபத்தில் தாமதமாக வெளியான ‘மதகஜராஜா’ திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் இந்த கூட்டணியில் இருந்து மீண்டும் ஒரு பெரிய ஹிட் வரும் என ரசிகர்கள் நம்பினர்.
ஆனால் திடீரென சுந்தர்.சி இந்தப் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். ரஜினிகாந்தை இயக்க பல இயக்குநர்கள் வாய்ப்பு தேடும் நிலையில் அவர் விலகியது பல கேள்விகளை எழுப்பியது.
அவரது விலகலுக்கு பல்வேறு காரணங்கள் பேசப்பட்டன. சிலர், படத்தை First Copy அடிப்படையில் தயாரிக்க சுந்தர்.சி விரும்பியதாகவும் அதற்கு கமல்ஹாசன் சம்மதிக்காததால் இந்த மாற்றம் ஏற்பட்டதாகவும் கூறினர். மற்றொரு தரப்பு, சுந்தர்.சி சொன்ன கதை தயாரிப்பு தரப்புக்கு பிடிக்காததால் புதிய இயக்குநரை தேர்வு செய்ததாகவும் கூறியது.
மேலும் சுந்தர்.சி தனது நீண்ட கால திட்டமான ‘சங்கமித்ரா’ படத்தை தொடங்க இருப்பதால் தான் ‘தலைவர் 173’ படத்திலிருந்து விலகினார் என்றும் சில தகவல்கள் பரவின.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுந்தர்.சி இந்த தகவல்களை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், “சங்கமித்ரா படத்தை ஆரம்பிக்க இருப்பதால் தான் ‘தலைவர் 173’ படத்திலிருந்து விலகினேன் என்று கூறுகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. தற்போது இரண்டு வருடங்களுக்கு எனக்கு மற்ற படங்களின் கமிட்மென்ட்கள் இருக்கின்றன. சங்கமித்ரா படத்தை உடனடியாக தொடங்கும் திட்டமும் இல்லை. அதற்கும் இந்த படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றார்.
மேலும், தனது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டதாகவும், தற்போது அந்தப் படத்தின் CG பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, 2018ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ‘சங்கமித்ரா’ என்ற பிரமாண்ட திரைப்படம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆர்யா, ரவி மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் பாகுபலி போன்ற பெரிய பட்ஜெட்டில் உருவாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தயாரிப்பு செலவு அதிகரித்ததால் அந்தத் திட்டம் பின்னர் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ‘தலைவர் 173’ படத்தை தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.