பெங்களூருவில் பழைய சாம்பாரைச் சூடுபடுத்திப் பரிமாறிய விவகாரத்தில் ஏற்பட்ட அற்பக் குடும்பத் தகராறு, 27 வயது இளம் பெண்ணின் உயிரைப் பறித்துள்ள சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது.பெங்களூருவைச் சேர்ந்த காவ்யா (27), ரங்கசாமி என்பவரை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மணந்து, இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

கடந்த வியாழக்கிழமை அன்று, மூன்று நாட்களுக்கு முன்பு சமைக்கப்பட்ட சாம்பாரை மீண்டும் சூடுபடுத்திப் பரிமாறியது தொடர்பாகத் தம்பதியிடையே கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது.
இந்தச் சாதாரண விவாதம் முற்றிப் போன நிலையில், ரங்கசாமி தனது மனைவியைக் கடுமையான சொற்களால் நிந்தித்ததோடு, அவரைத் தாக்க முயன்றதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கணவரின் இத்தகைய போக்கால் மனமுடைந்த காவ்யா, ஆத்திரத்திலும் வேதனையிலும் விவசாயப் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த வீரியமிக்க பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தியுள்ளார். சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்து மயக்கமடைந்ததைக் கண்ட குடும்பத்தினர், அதிர்ச்சியுடன் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே காவ்யாவின் உயிர் பிரிந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.தற்போது காவ்யாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவலர்கள், ஒரு சிறிய சமையல் விவகாரம் தற்கொலை வரை சென்றதற்கான பின்னணி குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.