தமிழகத்தில் பருவகால மாற்றத்தின் காரணமாக குழந்தைகளிடையே பொன்னுக்கு வீங்கி வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பெற்றோர்கள் குழந்தைகள் பராமரிப்பு , மற்றும் ஆரோக்கியத்தில் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த மம்ப்ஸ் (MUMPS) எனப்படும் வைரஸ் மூலம் பரவும் பொன்னுக்கு வீங்கி நோய், காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

இது உமிழ்நீர் சுரப்பிகளில் அத்தகைய வீக்கம் உருவாவதால் கடுமையான வலி மற்றும் காய்ச்சல் ஏற்படக்கூடும். அதனுடன் தலைவலி, பசியின்மை, கன்னங்கள் வீங்குதல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளும் காணப்படலாம்.
இந்த மம்ப்ஸ் வைரஸால் ஏற்படும் பொன்னுக்கு வீங்கியால் பாதித்தவர்களின் இருமல், தும்மல், சளி, உமிழ்நீர் திவலைகள் மூலம் பிறருக்கு அது பரவும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்காக தனியாக தடுப்பு மருந்துகள் தேவையில்லை என்பதால், நோய் தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தாலே அந்த பாதிப்பு சரியாகிவிடும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.