10 வது, டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று மாலை 07 மணிக்கு குஜராத் மாநிலம், அஹமதாபாத் - நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பல பரீட்சை நடத்த உள்ளன.
03 வது முறையாக 'அதிக முறை கோப்பை வென்ற நாடு' என்ற வரலாற்றுச் சாதனையை நோக்கி இந்தியா களமிறங்கவுள்ளது. நடந்து முடிந்த அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிக்கு முன்னேறியது. இந்திய அணியின் சஞ்சு சாம்சனின் அதிரடி ஃபார்ம் இந்தியாவுக்குப் பெரும் பலமாக மாறியுள்ளது.

இறுதிப்போட்டியிலும் சஞ்சு சிறந்த தொடக்கத்தை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா இதுவரை ஒரு போட்டியிலும் சிறந்த தொடக்கத்தை கொடுக்கவில்லை. ஆனால்,கடைசி நேரத்தில் அணிக்கு வந்த இஷான் கிஷன் சிறந்த தொடக்கத்தை கொடுத்துள்ளார்.
அடுத்ததாக அணியின் கேப்டன் சூர்யகுமார், அதிரடி ஆள் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, சிவம் துபே என இந்திய பேட்டிங் வரிசை சிறப்பாக உள்ளது. பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங்கின் வேகம் மற்றும் வருண் சக்கரவர்த்தியின் சுழல் எதிரணியை திணற வைக்கிறது.

இந்தத் தொடரில் இந்திய அணி சில வழக்கத்திற்கு மாறான நடைமுறைகளைப் பின்பற்றியுள்ளது. அதாவது, இறுதிப்போட்டிக்கு முன்னதாக தங்கும் ஹோட்டலை மாற்றியிருக்கிறது. அகமதாபாத்தில் வழக்கமாகத் தங்கும் 'ஐடிசி நர்மதா' ஹோட்டலுக்குப் பதிலாக, தற்போது 'தாஜ் ஸ்கைலைன்' ஹோட்டலில் இந்திய அணி முகாமிட்டுள்ளது.
கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, இந்திய அணி 'ஐடிசி நர்மதா' ஹோட்டலில் தங்கியிருந்தது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்தது. மேலும், நடப்பு 2026 டி20 உலகக் கோப்பையில், சூப்பர் 08 சுற்றிலும் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா இதே மைதானத்தில் படு தோல்வி அடைந்தது.
எனவே, அணியின் ராசியின்மை காரணமாகவும், ஹோட்டலை மாற்றுவது அகமதாபாத்தின் பழைய கசப்பான நினைவுகளை மாற்ற உதவும் என்பதால் இந்திய அணி இந்த முடிவை எடுத்துள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் நடந்தது அதுவல்ல. இந்த டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முதலில் தகுதி பெறும் அணிக்கு 'ஐடிசி நர்மதா' ஹோட்டலை அதிகாரப்பூர்வ ஹோட்டலாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்கனவே ஒதுக்கியிருந்தது.
அதன்படி, முதல் அணியாக நியூசிலாந்து தகுதி பெற்றதால் நியூஸிலாந்து அணிக்கு ஐடிசி நர்மதா ஹோட்டல் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி 'தாஜ் ஸ்கைலைன்' தங்கியுள்ளது.