
கர்நாடகா மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் உள்ள குருகுல் சர்வதேச பள்ளி விடுதியில், ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் சக மாணவர்கள் மீது இரும்பு கம்பியால் நடத்திய தாக்குதலில் ஒரு மாணவர் உயிரிழந்தார்.
நேற்று இரவு உணவிற்கு பிறகு மாணவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட சிறு தகராறு காரணமாக, ஆத்திரமடைந்த அந்த மாணவர் இரும்பு கம்பியால் தாக்கியதில் ஒரு மாணவர் பலியானார், மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் விம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலை தடுக்க முயன்ற விடுதி காப்பாளர் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு அந்த மாணவர் தப்பியோடிவிட்டார்.
பலியான மாணவனின் பெற்றோர், தாக்குதலில் கத்தி பயன்படுத்தப்பட்டதாக கூறி பள்ளியின் விளக்கத்தை மறுத்துள்ளனர். மேலும், தாக்குதல் நடத்திய மாணவர் போதைக்கு அடிமையானவராக இருக்கலாம் என்றும், இத்தகைய கொடூர செயலுக்கு பள்ளி நிர்வாகத்தின் பாதுகாப்பு குறைபாடே காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
தப்பியோடிய மாணவனை பிடிக்கப் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Edited by Siva