பிரபல சுற்றுலா மையமாக விளங்கும் புதுச்சேரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அந்த வகையில், நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு மற்றும் ஊசுட்டேரி படகு மையங்களில் சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை ரசித்தபடி படகு சவாரி செய்வதை பெரிதும் விரும்புகின்றனர்.

இந்த நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு சிறப்பு சலுகையாக இலவச படகு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முதலமைச்சர் ரங்கசாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று நடைபெறும் மகளிர் தினத்தை முன்னிட்டு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் கீழ் செயல்படும் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு மற்றும் ஊசுட்டேரி படகு மையங்களுக்கு வருகை தரும் அனைத்து பெண்களுக்கும் கட்டணமின்றி இலவசமாக படகு சவாரி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட அவர், இந்த சிறப்பு வாய்ப்பை பயன்படுத்தி இயற்கை சூழலில் மகிழ்ச்சியான அனுபவத்தை பெறுமாறு பெண்களை அழைத்துள்ளார்.