அணு ஆயுத போட்டி காரணமாக இஸ்ரேல் உடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. தொடர் தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. அதன்படி,மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், கத்தார் தாக்குதலில் இந்தியர்கள் உயிரிழந்ததாகப் பரவிய வதந்திகளுக்கு இந்தியத் தூதரகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாடு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தொடர் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்தத் தாக்குதல்களால் தோஹாவில் இந்தியர்கள் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் பரவின. ஆனால், இதுவரை இந்தியர்களின் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதே நேரம் வான்வழிப் போக்குவரத்து முடக்கம் மற்றும் உணவுப் பற்றாக்குறை அச்சத்தால் கத்தாரில் வசிக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் பெரும் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி 28 முதல் இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டணி மற்றும் ஈரான் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. ஈரான் அடுத்த இலக்காக கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்திருப்பதால் பதற்றமான சூழல் காணப்படுகிறது.