இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக, இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் எனும் அச்சத்தில், பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக சிலிண்டர்களை வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக முன்பு 55 நாட்களில் LPG சிலிண்டர்களை முன்பதிவு செய்தவர்கள் 15 நாட்களில் LPG சிலிண்டர்களை முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய அரசு தரப்பில் இருந்து வெளியாகியுள்ள தகவலின்படி, பதுக்கல் மற்றும் கறுப்புச் சந்தை விற்பனையைத் தடுக்க, LPG முன்பதிவு காலம் 21-லிருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், LPG உற்பத்தியை அதிகரிக்க சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், வணிகப் பயன்பாட்டைவிட வீட்டு உபயோக LPG-க்கு முன்னுரிமை அளிக்கவும் அரசு உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், "சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஆதாரமற்றவை. நாட்டில் போதுமான அளவு சமையல் எரிவாயு உள்ளது. எரிவாயு குறித்து மக்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது எப்போதும் உதவும்" என BPCL, HPCL நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளன.