சென்னை வடபழனியில், மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில் தந்தை கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், மகளும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனி கங்கையம்மன் கோயில் பகுதியில் வசித்து வந்தவர் 57 வயதான கிருஷ்ணகுமார். ஆட்டோ ஓட்டுநராக இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் பிருந்தா திருமணமாகி கணவருடன் அம்பத்தூரில் வாழ்ந்து வருகிறார். இளைய மகள் பாக்கியா தாய், தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
பாக்கியாவுக்கு 30 வயதாகியும் இதுவரை திருமணம் ஆகாததால், தந்தை கிருஷ்ணகுமார் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 07ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கிருஷ்ணகுமார் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் மனைவியும், மகளும் அவரை தேடி அலைந்துள்ளனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

மறுநாள் காலை மார்ச் 08 ஆம் தேதி அன்று இரவு கிருஷ்ணகுமாரின் மனைவி வீட்டிற்கு பின்னால் சென்று பார்த்துள்ளார். அங்குள்ள பாழடைந்த கிணற்றின் மீது கிருஷ்ணகுமாரின் செல்போன் இருப்பதை கண்டு தன் மகளிடம் தெரிவித்துள்ளார். உடனே, மகள் பாக்கியா ஓடிவந்து பார்த்தபோது கிணற்றில் தந்தை உடல் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனே அம்மாவை வீட்டிற்குள் அழைத்துச் சென்று அவரை அறையில் வைத்து பூட்டியுள்ளார். அதன்பின்னர், சமையலறைக்குச் சென்று சற்று நேரத்தில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அறைக்குள் இருந்த தாய், மகள் தூக்கில் தொங்குவதை ஜன்னல் வழியாக பார்த்து கதறியுள்ளார்.
உடனடியாக தனது மூத்த மகள் பிருந்தாவுக்கு போன் செய்து நடந்தவற்றைக் கூற, பிருந்தா தன் கணவர் வம்சியுடன் வீட்டிற்கு வந்து அறையைத் திறந்து தனது அம்மாவை மீட்டுள்ளார். பின்னர், சமையலறைக்குச் சென்று பாக்கியாவை மீட்டு சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றுள்ளார் வம்சி. ஆனால், அங்கு பாக்கியா ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த இரட்டை தற்கொலை குறித்து வடபழனி போலீசாருக்கும், தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு இரு தரப்பினரும் விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து கிருஷ்ணகுமாரின் உடலை மீட்டுள்ள நிலையில், வடபழனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இளைய மகள் பாக்கியாவிற்கு 30 வயது ஆகியும் இதுவரை திருமணம் செய்து வைக்க முடியாததால் தந்தை கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதும், தந்தை இறந்த துக்கம் தாளாமல் மகளும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.
ஆனாலும், இருவர் தற்கொலைக்கும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.