இலங்கை கிரிக்கெட் அணியில் புதிய பயிற்சியாளராக கேரி கிரிஸ்டன் பொறுப்பேற்கவுள்ளார். நடந்து முடிந்த 10 வது உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா- இலங்கை அணிகள் இணைந்து நடத்தின. ஆனால், இலங்கை அணி, சூப்பர் 08 சுற்றுடன் தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியது.
இதற்கு பொறுப்பு ஏற்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூரிய பதவி விலகினார். அவருக்கு பதிலாக கேரி கிர்ஸ்டன் பொறுப்பு ஏற்கவுள்ளார். அதன்படி, வரும் ஏப்ரல் 15, 2026 முதல் அவர் இந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள இவரது பதவிக்காலம் ஏப்ரல் 14, 2028 வரை நீடிக்கவுள்ளது. 2008 முதல் 2011 வரை இந்திய அணியின் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் இருந்துள்ளார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-இல் இந்தியா ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகவும் இருந்தார்.
தற்போது தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு இலங்கை அணியைத் தயார் செய்வது இவருக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.