தமிழக நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களின் கனவு இல்லறத்தை நனவாக்கும் வகையில், வெறும் 10,000 ரூபாய் முன்பதிவு கட்டணத்தில் கடற்கரை திருமணங்களை நடத்தும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுவரை திரைப்பிரபலங்கள் மற்றும் பெரும் கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த இத்தகைய திருமணங்கள், இனி சாதாரண மக்களுக்கும் எட்டும் தூரத்தில் அமையும்.
சென்னையின் கிழக்கு கடற்கரை சாலை, குறிப்பாக மாமல்லபுரம் பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தனியார் ரிசார்ட்டுகளின் அதிகப்படியான கட்டணத்தை தவிர்க்கும் வகையில், அரசு சார்பில் இந்த வசதி செய்து தரப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் சைவ உணவிற்கு ஒரு நபருக்கு 700 ரூபாயும், அசைவ உணவிற்கு 1,100 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை சூழலில் குறைந்த செலவில் திருமணங்களை நடத்த விரும்புவோருக்கு இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
அரசு எடுத்துள்ள இந்த முயற்சி சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை சார்ந்த உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva