T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. இதற்கு முன்பு 2007, 2024-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது.
இதன் மூலம் டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. மேற்கொண்டு தொடர்ச்சியாக அடுத்தடுத்த தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி மற்றும் சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் அணி என்ற சாதனைகளையும் இந்தியா படைத்துள்ளது.
அதோடு போட்டியை நடத்திய நாடுகளில் முதல் தடவையாக கோப்பையை வென்ற நாடு எனவும் இந்தியா சாதித்தது. உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.21.5 கோடி பரிசாக கிடைத்தது.
இந்த நிலையில், டி20 உலகக்கோப்பையை மூன்றாவது முறையாக வென்ற சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.131 கோடி பரிசுத்தொகையை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
அதன்படி, இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர், அணி ஊழியர்கள், தேர்வாளர் குழுவைச் சேர்ந்தவர் மற்றும் இதர உதவியாளர்கள் என அனைவருக்கும் சேர்த்து ரூ.131 கோடி பரிசு த்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ செயலளார் தேவஜித் சைகியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.கடந்த 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. ஆனால் தற்சமயம் அதனைக் காட்டிலும் ரூ.6 கோடி அதிகமான பரிசுத் தொகையை வழங்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் இது ஐசிசி அறிவித்திருக்கும் பரிசுத் தொகையை காட்டிலும் ரூ.104 கோடி அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.