விசில் ஊதியப்படியே நடனமாடிய மாணவி.. மேடையிலேயே பிடுங்கிய அதிகாரி..
TV9 Tamil News March 19, 2026 07:48 PM

கோவை, மார்ச் 19, 2026: கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வாக்குப்பதிவு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாணவர்கள் நடனமாடியபோது, ஒரு மாணவி விசில் வைத்து நடனம் ஆடியதால், அங்கு இருந்த அதிகாரி ஒருவர் உடனடியாக அந்த விசிலை மாணவியிடமிருந்து பிடுங்கிச் சென்றார். இந்த காட்சிகள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகின்றன. மேலும், இச்சம்பவம் அங்கு சற்று சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல்:

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் தரப்பில் அதற்கான பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் ஒரு பக்கம் பணிகளை மேற்கொண்டு வரும் சூழலில், தேர்தல் ஆணையமும் மக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

மேலும் படிக்க:தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்: சுகாதாரத் துறை எச்சரிக்கை

அந்த வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வாக்குச்சாவடி எப்படி இருக்கும், ஒருவர் எப்படி வாக்களிக்க வேண்டும், வாக்குரிமையின் முக்கியத்துவம் என்ன என்பன குறித்து விளக்கப்பட்டது. அதேபோல், கல்லூரி மாணவ, மாணவியர்களால் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

விசில் ஊதி நடனமாடிய மாணவி – பிடுங்கிச்சென்ற அதிகாரி:

அப்போது கோலாட்டம் ஆடிய மாணவிகளில் ஒருவர் விசிலை வைத்து நடனம் ஆடினார். இதையடுத்து, அங்கு இருந்த அதிகாரி ஒருவர் அந்த மாணவியரிடமிருந்து விசிலை பிடுங்கிச் சென்றார். இந்த சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் “தமிழக வெற்றி கழகம்” முதல் முறையாக களமிறங்குகிறது. அந்தக் கட்சிக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் “விசில்” சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாணவி விசிலை பயன்படுத்தியது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என கருதி, அதிகாரி உடனடியாக அதை அகற்றியதாக கூறப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.