5 மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசிய பெற்றோர்! கிருஷ்ணகிரியில் கொடூரம்
Top Tamil News March 19, 2026 09:48 PM

வேப்பனஹள்ளி அருகே 5 மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் தொடர்பாக தாய், தந்தை உட்பட மூன்று பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த ராமசந்திரம் பாறைகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் (30). இவருடைய மனைவி சத்தியவானி. இவர்களுக்கு திருமணம் ஆகி ஏற்கனவே 2 வயதில் தனுஸ்ரீ என்று ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு இவர்களுக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில்  அக்கிராமத்தின் உள்ள கிணற்றில் பெண் குழந்தை சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிறகு போலீசார் விசாரணை நடத்தியதில் 5 மாத பெண் சிசு தமிழரசன், சத்தியவானி தம்பதியரின் குழந்தை என்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழரசன், சத்தியவானி மற்றும் தமிழரசனின் தந்தை ராஜன் ஆகிய மூன்று பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 5 மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தார்களா? கொலை செய்து கிணற்றில் விசினார்களா? கொலைக்கு காரணமானவர்கள் யார்? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.