நான் கூட்டணிக்கு போனா 8 பேர் கூட ஓட்டு போட மாட்டாங்க!.. சீமான் ஓப்பன்...
WEBDUNIA TAMIL March 19, 2026 11:48 PM


அதிமுக திமுக போன்ற திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புதிய அரசியல் சக்தியாக உருவானவர்தான் நாம் தமிழர் கட்சி சீமான். துவக்கத்திலிருந்தே திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். எனவே அதிமுக, திமுக இரண்டு கட்சிகளையும் பிடிக்காதவர்கள் சீமானுக்கு வாக்களித்தார்கள்.

கட்சி துவங்கியதில் இருந்தே நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு வருகிறது. அந்த கட்சியின் வாக்கு வங்கியும் படிப்படியாக உயர்ந்து தற்போது 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆச்சரியம் என்னவெனில், பிரதமரை தேர்ந்தெடுக்கும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட சீமானுக்கு 8.22 சதவீத வாக்குகள் கிடைத்தது..

2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவிருக்கிறது. இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு சீமான் அளித்த பேட்டியில் ‘இரு திராவிட கட்சிகளை எதிர்த்து இங்கே பல கட்சிகள் உருவானது. ஆனால் காலப்போக்கில் யாரை எதிர்த்து கட்சி தொடங்கினார்களோ அவர்களுக்கு ஆதரவு கொடுத்து அங்கேயே சேர்ந்து விட்டார்கள். நாங்கள் தீமை செய்தவர்களை ஒழிக்க வந்திருக்கிறோம்.. அவர்களை மீண்டும் ஆட்சியில் அமரவைக்க நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. 8.22 சதவீத வாக்குகளை வைத்திருக்கும் நான் கூட்டணிக்கு போனால் 8 பேர் கூட ஓட்டு போட மாட்டார்கள்’ என சொல்லியிருக்கிறார்.

மேலும் மக்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும், விளைநிலங்கள் பாதிக்கப்பட்டாலும், அரசு மக்களை வஞ்சித்தாலும் சீமான் எங்கே, நாம் தமிழர் கட்சி எங்கே என மக்கள் தேடுகிறார்கள்.. விரைவில் என்னை தேர்வும் செய்வார்கள்’ என நம்பிக்கையுடன் பேசியிருக்கிறார்..
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.