சமீபத்தில் தவெகவைச் சேர்ந்த நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, ரஜினிகாந்த் குறித்துத் தெரிவித்த விமர்சனங்கள் தமிழக அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. திமுகவிற்கு பயந்தே ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றும், விஜய் தைரியமானவர் அதனால்தான் அர்சியலில் இருக்கிறார் என்றும் பேசினார்.
ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு எதிராகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலகப் பிரபலங்களும் ரஜினிகாந்துக்கு ஆதரவாகத் தங்களது கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த விவாகரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்று பதிவிட்டிருந்தார்.
ரஜினியின் இந்தப் பதிவை அவரது ஆதரவாளர்கள் பலரும் கொண்டாடித் தீர்த்தாலும், அவரது தீவிர ரசிகர்கள் தரப்பில் இருந்து சில அதிருப்திகளும், நியாயமான கேள்விகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன:
தற்போது ரஜினிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த பல அரசியல் தலைவர்கள், கடந்த காலங்களில் ரஜினிகாந்தை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளனர். அப்போது அவர்கள் உங்களை விமர்சித்தபோது அமைதியாக இருந்த நீங்கள் ஏன் ஒரு கண்டன அறிக்கையும் வெளியிடவில்லை? இப்போது மட்டும் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது ஏன்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாட்டிலும் மக்கள் அன்றாடம் சந்திக்கும் எத்தனையோ முக்கியப் பிரச்சனைகள் உள்ளன. அவற்றுக்கெல்லாம் கருத்துத் தெரிவிக்காமல் பெரும்பாலும் மௌனம் சாதிக்கும் நீங்கள், உங்கள் மீதான தனிப்பட்ட விமர்சனத்திற்கு மட்டும் உடனடியாக எதிர்வினையாற்றுவது சரியா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எல்லா விசயங்களிலும் அமைதியை கடைபிடிக்கும் ரஜினி, விஜய் விவகாரத்தில் மட்டும் ஏன் உடனடியாக அறிக்கை விட்டார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.