தமிழகத்தையே உலுக்கிய விளாத்திகுளம் 12-ஆம் வகுப்பு மாணவி கொலை வழக்கில், அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
விளாத்திகுளம் அருகே கடந்த 11-ஆம் தேதி காட்டுப்பகுதியில் பிளஸ்-2 மாணவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இச்சம்பவம் நடந்து 10 நாட்களாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படாததால், மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வரை சென்றது. மாவட்ட எஸ்பி தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சுமார் 15-க்கும் மேற்பட்ட பழைய குற்றவாளிகளிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் குற்றவாளியை அடையாளம் காண்பதில் காவல்துறையின் ‘அறிவியல் பூர்வ விசாரணை’ (Scientific Investigation) முக்கியப் பங்காற்றியுள்ளது. சந்தேகத்தின் பேரில் பிடிபட்டவர்களில், சாயல்குடியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவரது கையில் நகக்கீறல்கள் இருந்ததை போலீஸார் கவனித்தனர்.
கொலை செய்யப்பட்ட மாணவி தன்னைத் தற்காத்துக் கொள்ள போராடியபோது, அவரது நகங்களுக்குள் கொலையாளியின் சதைத் துணுக்குகள் சிக்கியிருந்தன. அந்தச் சதைத் துணுக்குகளையும், முனீஸ்வரனின் ரத்த மாதிரியையும் ஆய்வகத்திற்கு அனுப்பி டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இரண்டு மாதிரிகளும் கச்சிதமாக ஒத்துப்போனதை அடுத்து, முனீஸ்வரனே கொலையாளி என்பது உறுதி செய்யப்பட்டது.
ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டதையடுத்து, முனீஸ்வரனை போலீஸார் முறைப்படி கைது செய்தனர். :கைதான தர்ம முனீஸ்வரன் மீது ஏற்கனவே 2020-இல் எட்டயபுரத்தில் 60 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு உள்ளது. இதற்கிடையில் டிஎஸ்பி சுந்தரபாண்டியன் தலைமையிலான குழுவினர் வேடநத்தம் காட்டுப்பகுதியில் உள்ள ஒரு காற்றாலையில் (Windmill) பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சம்பவம் நடந்த அன்று மர்மமான முறையில் நின்றிருந்த ஒரு இருசக்கர வாகனத்தின் எண்ணைக் கொண்டு விசாரணை நடத்தியதில், அது ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் திருடப்பட்டது என்பது உறுதியானது. மேலும் ராமநாதபுரம் வரை விரட்டிச் சென்ற போலீஸார், அந்த வாகனத்தைத் திருடி வந்த சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (எ) மாவீரன் (30) என்பவனைக் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.