மார்ச் 20, 2026: ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழகசட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் களம் பரபரப்பாக தொடங்கியுள்ளது. தமிழகத்தில் முக்கியமான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாக திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி பார்க்கப்படுகிறது. இந்தத் தொகுதி மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேலும், மதுரை மக்களவைத் தொகுதியின் கீழ் வரக்கூடிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். அரசியல் ரீதியாக இந்தத் தொகுதி முக்கியமானதாக கருதப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நடைபெறும் தொகுதியாகவும் இது பார்க்கப்படுகிறது.
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி:திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை எடுத்துக் கொண்டால், அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா சுமார் 1,03,683 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எஸ்.கே. பொன்னுத்தாய் 74,194 வாக்குகள் பெற்றார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சியும், நான்காவது இடத்தில் மக்கள் நீதி மையமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ராமதாஸ்-சசிகலா கூட்டணி உறுதியானது… தமிழகம்-புதுச்சேரியில் இணைந்து போட்டி!
இந்தத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் ஆகும். நகர்ப்புற வாக்காளர்கள் இந்த பகுதியில் அதிகமாக உள்ளனர். அதேசமயம், நடுத்தர மற்றும் கீழ்மட்ட வருமானக் குடும்பங்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
அரசியல் ரீதியாக கவனம் ஈர்த்த தொகுதி:கடந்த சில மாதங்களாக, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி மீண்டும் பரபரப்பாகியுள்ளது. குறிப்பாக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதுதொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனால், இந்தத் தொகுதி அரசியல் ரீதியாக பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதியை பொருத்தவரையில், அதிமுகக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. 1977ஆம் ஆண்டிலிருந்து இதுவரை அதிமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 2 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எனவே, இந்தத் தொகுதி அதிமுகவின் “கோட்டை” என கருதப்படுகிறது. வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் இந்தத் தொகுதி அதிமுகக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய பிரச்சனைகள் என்ன?இருப்பினும், இந்தத் தொகுதியில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் நிலவி வருகின்றன. குடிநீர் தட்டுப்பாடு, சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறைபாடு, போக்குவரத்து நெரிசல், வேலைவாய்ப்பு பிரச்சனை, கழிவுநீர் மற்றும் கழிவு மேலாண்மை சிக்கல்கள், நகர்ப்புற திட்டமிடல் குறைபாடு ஆகியவை முக்கிய பிரச்சனைகளாக உள்ளன.
மேலும், கல் குவாரிகள் மற்றும் மலை சார்ந்த செயல்பாடுகள் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர்.
இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும் என மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.