தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிக்கை:
மின்னணு மற்றும் சமூக ஊடகங்களில், அரசியல் விளம்பரங்களை வெளியிட, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், மாநில அல்லது மாவட்ட அளவிலான, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம், முன் அனுமதி சான்றிதழ் பெற வேண்டும்.
இதற்கு, குறைந்தது மூன்று நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். ஆள் மாறாட்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு வாயிலாக உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் பதிவுகளால் ஏற்படும் சவால்களை கருத்தில் வைத்து, தேர்தல் கமிஷன் கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, செயற்கை நுண்ணறிவு வாயிலாக உருவாக்கப்பட்ட அல்லது டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட, அனைத்து வீடியோக்களிலும், ஏ.ஐ., வாயிலாக உருவாக்கப்பட்டது, டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டது,
செயற்கை உள்ளடக்கம் போன்ற தெளிவான லேபிள்கள் இருக்க வேண்டும். ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் மற்றும் வாக்காளர்களை திசை திருப்பக் கூடிய உள்ளடக்கங்கள், முற்றிலுமாக தடை செய்யப்பட்டு உள்ளன. அரசியல் கட்சிகளின், சமூக வலைதள பக்கங்களில், இத்தகைய தவறான அல்லது சட்ட விரோத வீடியோக்கள் கண்டறியப்பட்டாலோ அல்லது அது குறித்து புகார் அளிக்கப்பட்டாலோ, மூன்று மணி நேரத்திற்குள், அவற்றை நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.