சீனாவின் லியோனிங் மாகாணத்தைச் சேர்ந்த வாங் என்ற நபர், கடந்த எட்டு ஆண்டுகளாகத் தன் தொண்டையில் 12 சென்டிமீட்டர் நீளமுள்ள உலோகச் சாப்ஸ்டிக் ஒன்று சிக்கிய நிலையில் வாழ்ந்து வந்த விசித்திரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுபோதையில் உணவு சாப்பிடும்போது தற்செயலாக இந்த இரும்புக்குச்சியை அவர் விழுங்கியுள்ளார்.
அப்போது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யப் பரிந்துரைத்த போதிலும், கழுத்தில் கீறல் விழுந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் அவர் சிகிச்சை பெற மறுத்துவிட்டார். லேசான வலி இருந்தபோதிலும், சுவாசிப்பதில் சிரமம் இல்லாததால் அந்தச் சாப்ஸ்டிக் உடனோயே அவர் காலத்தைக் கடத்தி வந்துள்ளார்.
சமீபத்தில் தொண்டையில் வலி தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்ததோடு, உணவை விழுங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு எடுக்கப்பட்ட எக்ஸ்-ரேவைப் பார்த்த மருத்துவர்கள், இத்தனை ஆண்டுகளாக ஒரு உலோகக் குச்சி அவரது முக்கிய நரம்புகளையோ அல்லது உறுப்புகளையோ சேதப்படுத்தாமல் இருந்ததைக் கண்டு வியப்படைந்தனர்.
இறுதியில் மருத்துவர்களின் தொடர் ஆலோசனக்குப் பிறகு மனமாற்றம் அடைந்த வாங்கிற்கு, ஒரு சிறிய கீறல் மூலம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்தச் சாப்ஸ்டிக் அகற்றப்பட்டது. தற்போது அவர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.