தமிழகத்தில் விமர்சையாக கொண்டாடப்படும் ரமலான் பண்டிகை.. தலைவர்கள் வாழ்த்து..
TV9 Tamil News March 21, 2026 12:48 PM

சென்னை, மார்ச் 21, 2026: தமிழகத்தில் மார்ச் 21ஆம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்திருந்தார். இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ரமலான் பண்டிகை.  ரமலான் மாதத்தில், 30 நாட்கள் நோன்பு இருந்து கடவுளை வழிபடுவது வழக்கம். நோன்பு திறக்கும் நாள் ரமலான் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக தமிழக தலைமை காஜி வெளியிட்ட அறிவிப்பில், மார்ச் 19ஆம் தேதி மாலை ஷவ்வால் மாதத்திற்கான பிறை தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் தென்படவில்லை. எனவே, ரமலான் மாதம் 30 நாட்கள் பூர்த்தி அடைவதால், அதனைத் தொடர்ந்து மார்ச் 21ஆம் தேதி நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

ரமலான் பண்டிகை:

“புனித ரமலான் மாதத்தில் நாம் மேற்கொள்ளும் நோன்பும், நல் செயல்களும் அனைத்தையும் எல்லாம் வல்ல இறைவன் அங்கீகரிப்பான். இந்த இனிய நாளில் நம்மிடையே ஈகையும், சகோதரத்துவமும் தலைக்கட்டட்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இதற்காக சிறப்பு தொழுகைகள் காலை முதலே நடைபெற்று வருகின்றன.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து:

இந்த சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் ரமலான் பண்டிகைக்கான வாழ்த்து தெரிவித்துள்ளார்:  “நோன்பை முடித்து, புத்தாடை அணிந்து, அன்பை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் இஸ்லாமிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்களில் ஒருவனின் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள்.

வரலாற்றில் நாம் கண்ட பெரும் புரட்சியாளர்களில் ஒருவரும், சமத்துவத்தின் திருவிளக்குமான நபிகள் நாயகத்தின் நெறியில் வாழ்ந்து வரும் இஸ்லாமியச் சகோதரர்களுக்கு என்றும் அரணாக நமது திமுகவும், திமுக அரசும் திகழ்ந்து வருகின்றது. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அரசியல் பிரதிநிதித்துவம், மதச் சுதந்திரம் என அனைத்து நிலைகளிலும் சிறுபான்மைச் சகோதரர்களுக்கான சமூக நீதியை நிலைநாட்டி இருக்கிறது.

இஸ்லாமிய மக்களுக்கு எதிரான சட்டங்களை மத்திய பாஜக அரசு கொண்டுவரும் போதெல்லாம், மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் அவற்றை எதிர்த்து கடுமையாகப் போராடி வருவதுடன், சட்டமன்றத் தீர்மானங்கள் வாயிலாகவும் நமது நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தி வருகிறோம். மதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமின்றி நாம் செயல்படுவதால்தான் அனைத்துத் தரப்பு மக்களும் நம்மைத் தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர்.”

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து:

அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய #ரம்ஜான்திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈகையின் சிறப்பினை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை, எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழ்ந்திட வேண்டி இறைவனைத்… pic.twitter.com/I03MRvqFgD

— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu)

அதேபோல், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ரமலான் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்: “அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈகையின் சிறப்பை எல்லோருக்கும் உணர்த்தும் வகையில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை, எளியோருக்கு வழங்கி, அனைவரும் இன்புற்று வாழ இறைவனை வேண்டி, புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து வந்த இஸ்லாமிய சகோதரர், சகோதரிகளுக்கு இறைவன் அனைத்து நலன்களையும் வழங்கிட பிரார்த்திக்கிறேன்.

மேலும் படிக்க: தமிழ்நாட்டில் மார்ச் 21 அன்று ரமலான் கொண்டாட்டம் – தலைமை காஜி அறிவிப்பு

இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனிதநேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து, உலகில் அமைதியும் சமாதானமும் நிலைக்க உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.