திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஏனெனில் அந்தக் கட்சி 10 தொகுதிகள் வரை கேட்பதாகவும், திமுகவோ அக்கட்சிக்கு ஐந்துக்கும் குறைவான தொகுதிகளை கொடுக்க முன்வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் ‘திமுகவுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.. இதை இழுபறி என சொல்ல முடியாது.. தாமதம் என சொல்ல வேண்டும்.. கட்சியின் நலன் எவ்வளவு முக்கியமோ அதேபோல் கூட்டணி நலனும் முக்கியம். அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாங்கள் முடிவுகளை எடுக்க வேண்டும்.. பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது’ என்று அவர் கூறினார்..
எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு பதில் சொன்ன திருமா ‘கூட்டணிக்கு போயஸ்கார்டனை தேடி வந்த காலம் மாறி இப்போது டெல்லியை தேடி செல்லும் நிலை அதிமுக உருவாகி இருப்பப்பதை பார்த்தால் கவலை அளிக்கிறது. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி அதிமுக என்னும் மாபெரும் கட்சியின் தலைவர். ஆனால் அவரை பாஜக கிள்ளுக்கீரையாக பயன்படுத்துகிறதோ என்கிற எண்ணம் வருகிறது. எப்படியிருந்தாலும் அது அவர்களின் கட்சி விவகாரம்.. அதற்கு மேல் அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை’ என்று அவர் கூறினார்.