கள் இறக்கிய தொழிலாளர்கள் கைது… பனைத் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கா?… தமிழக அரசை வறுத்தெடுத்த சீமான்..!!!
SeithiSolai Tamil March 21, 2026 04:48 PM

திருச்சி மாவட்டம் லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் கள் இறக்கியதாக பனைத் தொழிலாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசின் மதுக் கொள்கையைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

இதனால் உடலுக்குத் தீங்கு விளைவிக்காத, தமிழர்களின் பாரம்பரிய உணவாகவும் மருத்துவக் குணம் கொண்டதாகவும் கருதப்படும் ‘கள்ளை’ போதைப்பொருள் என்று கூறி தடை செய்துள்ள அரசு, டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்களை விற்பனை செய்வது எந்த வகையில் நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் டாஸ்மாக்கில் விற்கப்படுவது என்ன புனித தீர்த்தமா எனக் காட்டமாக வினவியுள்ள அவர், கள் இறக்கும் எளிய தொழிலாளர்களைப் பயங்கரவாதிகள் போலச் சித்தரித்து, அவர்கள் மீது பொய் வழக்கு சுமத்தி சிறையிலடைப்பது காவல்துறையின் அராஜகப் போக்கு என்றும், இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கஞ்சா மற்றும் இதர அபாயகரமான போதைப்பொருட்களின் நடமாட்டத்தைத் தடுக்கத் தவறிய காவல்துறை, பனைத் தொழிலாளர்களைக் குறிவைத்துத் தாக்குவது வேடிக்கையானது என்று சீமான் விமர்சித்துள்ளார். கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கள் ஒரு உணவாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் அதற்குத் தடை விதித்திருப்பது இயற்கைக்கும் அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட பனைத் தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ‘நச்சு கலந்த கள் விற்பனை’ என்ற குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ள அவர், எவ்வித ஆய்வும் இன்றி இத்தகைய வழக்குகளைப் புனைவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும், சிறையில் உள்ள தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.