இந்தியாவின் உள்ளோர் கிரிக்கெட் போட்டியான ஐ.பி.எல் போட்டியின் 19 வது சீசன் வரும் 28 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பங்குபற்றும்10 அணிகளும் தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே மொத்தமாக 09 வீரர்கள் போட்டி தொடங்குவதற்கு முன்பே காயத்தால் விலகியுள்ளனர். அது அவ்வணிகளுக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் 44 வயதான தோனியும் விளையாடவுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம், அவர் சமீபத்தில் நடைபெற்ற வலைப்பயிற்சியின் போது தனது காலில் ஏற்பட்ட வலியால் மைதானத்தில் மிகவும் சிரமப்பட்டு நடக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.
சமீபகாலமாகவே கால் வலியால் அவதிப்பட்டு வரும் தோனி, வலைப்பயிற்சியை முடித்துவிட்டு பெவிலியன் திரும்பிய போது தனது வழக்கமான சுறுசுறுப்புடன் இல்லை என்பதும், அவர் தனது 100 சதவீத உடல் தகுதியுடன் இல்லை என்பதும் அந்த வீடியோவில் வெளிச்சமாகியுள்ளது.
இந்த வீடியோவால், அவரது உடற்தகுதி குறித்த கவலைகள் மீண்டும் எழுந்துள்ளன. கடந்த 2023 முதல் முழங்கால் பிரச்சினையால் தோனி அவதிப்பட்டு வருகிறார். எனினும், அந்த ஆண்டு அவர் ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்று கொடுத்த பிறகு, முழங்கால் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஆனாலும் இந்த பிரச்சினை இன்னும் தீரவில்லை. இதனால் அவரது பேட்டிங்கும் பாதித்துள்ளது. அவரால் விரைவாக ஓடி, ஒற்றை மற்றும் இரட்டை ஓட்டங்களை எடுக்க முடியவில்லை.
மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பேட் செய்ய முடிகிறது. ஐபிஎல் தொடரின் தொடக்கம் முதலே விளையாடி வரும் தோனி, அத்தொடர் வரலாற்றின் மிக மூத்த மற்றும் வெற்றிகரமான வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். இந்த நிலையில் அவர் வலியுடனும், அதேநேரத்தில் சோர்வுடனும் நடப்பதைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சமீபத்திய சீசன்களில் அவரது ஓய்வு குறித்த வதந்திகள், மற்றும் எதிர் அணி ரசிகர்களின் விமர்சனங்கள் தொடர்ந்து விவாதப் பொருளாகி வருகிறது. இந்த சூழலில் இந்த வீடியோ ரசிகர்களின் கவலையை மேலும் அதிகரித்துள்ளது. அவர், ஓய்வு பெற வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.